வருகைக்கு நன்றி.

நசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது.                  உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்?)                        வருகைக்கு நன்றி

2012/03/23

ஆன்மா எனும் பேரொளி


87
கதிருங் கணப்பொறியுங் கங்குல் கலையுங்
கதிர்க்குங் கணங்களுங் கங்குல் - கதிநாடிக்
கட்கிலியைக் கண்பெறுங் காலையிற் காரிரியக்
கிட்டுங் ககனக் கனல்.

   திரவனும் மின்னலும் இருளே. நிலவும் ஒளிவீசும் விண்மீன்களும் இருளே. தன்னறிவைத் தேடி, எளிதில் புலப்படாத ஆன்மாவை அகத்தே அறியும் வேளையில் அண்டத்தின் இருளகற்றும் ஒளி பிறக்கும்.


கதிர்: கதிரவன்
கணப்பொறி: மின்னல்
கங்குல்: இருள்
கலை: நிலவு
கதிர்க்கும்: ஒளி வீசும்
கணங்கள்: விண்மீன்கள்
கதி: தன்னறிவு
கட்கிலி: புலப்படாதது
கண்பெறும்: அகத்தே அறியும்
காலை: வேளை
கார்: இருள்
இரிய: விலக
ககனம்: அண்டம்
கனல்: சுடர், ஒளி


    சிகேதன் தொடர்ந்தான். "அன்பர்களே! ஒளியைப் பற்றி முன்னர் சொன்னதை நினைவில் நிறுத்துங்கள். ஆன்மா ஒளியைப் போன்றது. நம் குணங்களின் அழகையோ அழுக்கையோ அறியச் செய்கிறது. ஒளியிலிருந்து விலகுமுன் அழுக்கையகற்ற வேண்டும் என்றேனல்லவா? மேலும் சொல்கிறேன் கேளுங்கள். ஆன்ம ஒளியின் முன்னே மற்ற ஒளிகள் எல்லாம் இருளாகும்"

"என்ன சொல்கிறீர்கள்?"

"ஆம்! பழம் போல் சிவந்து நீர் போல் வெளுத்து வானில் ஒளி தரும் கதிரவனுக்கு ஒளியைக் கொடுத்தது யார்? குளிர்ச்சியைத் தரும் நிலவின் ஒளி எங்கிருந்து வந்தது? அழகாகத் தோன்றும் அதே நேரம் அச்சத்தையும் தரும் மின்னலைப் பார்க்கிறோம். மின்னல் ஒளியை எங்கிருந்து பெற்றது? இரவிலே கண்ணுக்கும் மண்ணுக்கும் குளிர்ந்த ஒளியைத் தரும் விண்மீன்கள் வானில் வைரங்களாக மின்னுகின்றனவே? அந்த வைர ஒளி எங்கிருந்து வந்தது?" என்று அவையினரைக் கேட்டான் நசிகேதன்.

"இதென்ன, கேள்வி மேல் கேள்வியாகக் கேட்கிறது இந்தப் பிள்ளை? சொர்க்கம் பற்றி ஏதாவது சொல்லுமென்று பார்த்தால்..."

"ஐயா மகா ஞானியே... இளவல் ஒரு வேளை சொர்க்கத்தைப் பற்றித்தான் சொல்கிறார் போலிருக்கிறது.. சற்றுச் செவிமடுத்துக் கேட்போம்..."

"சூரியனுக்கு ஒளி எங்கிருந்து வந்தது என்ற கேள்விக்கும் சொர்க்கத்துக்கும் என்னய்யா தொடர்பு? பாமரர்களை ஞானச்சபையிலே அனுமதித்தால் இப்படித்தான்.."

"என்னதான் சொல்கிறார் இளவரசர் என்று கேட்போமே ஐயா.."

நசிகேதன் அவையோரைப் பார்த்துப் புன்னகைத்தான். "என் கேள்வியை மதித்துச் சிந்தித்ததற்கு நன்றி" என்றான். தொடர்ந்தான். "சொர்க்கத்தில் உள்ளதே இங்கே இருக்கிறது. இங்கிருப்பதே சொர்க்கத்தில் உள்ளது என்றேன் அல்லவா?"

"சொர்க்கத்தில் சூரியன் ஒளி இன்னும் அதிகமோ?"

"சொர்க்கத்திலும் சூரிய ஒளி இல்லை. இங்கேயும் சூரிய ஒளி இல்லை"

"என்ன?"

"ஆம்! சொர்க்கத்தில் சந்திரனுக்கு ஒளியில்லை. இங்கேயும் ஒளியில்லை. சொர்க்கத்தைப் போலவே இங்கும் மின்னல்களும் விண்மீன்களும் மையிருளானவை. அவ்வளவு ஏன்? தீச்சுடருக்குக் கூட சொர்க்கத்திலோ இங்கேயோ ஒளியில்லை"

"சற்றுமுன் தானே ஐயா ஒளி எங்கிருந்து வந்தது என்று கேட்டீர்கள்? இப்போது ஒளியில்லை என்கிறீர்களே? அரச மைந்தன் என்ற காரணத்துக்காக எங்களையும் பாமர மக்களையும் இப்படிக் குழப்புவதைப் பொறுக்க முடியாது..."

"மன்னிக்க வேண்டும் அரச குருவே!" என்றான் நசிகேதன். "நான் யாரையும் குழப்ப எண்ணவில்லை. என் ஆசான் எனக்கு விளக்கியதை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அனுமதியுங்கள்" என்றான்.

பிறகு அவையோரைப் பார்த்து, "அன்பர்களே! ஆன்மா என்பது ஒளிப்பிழம்பாகக் கூடியது. நம்முள் முடங்கிக் கிடக்கையில் குன்றியிருப்பது. தன்னையறிந்து ஆன்ம ஒளியை வளர்க்க வேண்டும். அந்த ஒளிதான் சூரியனுக்கும் சந்திரனுக்கும் மின்னலுக்கும் விண்மீன்களுக்கும் தீச்சுடருக்கும் ஒளியாகிறது.

நாம் நிதம் காணும் சூரியனும் சந்திரனும் மின்னலும் தீயும் தாரகைகளும் புற ஒளிகள். புற ஒளிகளைப் புரிய வைப்பதும் அறிய வைப்பதும் அறிவாகும். அன்பர்களே! வாழ்வின் குறிக்கோள் மெய்யறிவு எனும் தன்னறிவைப் பெறுவதாகும். வாழ்வின் அத்தனை இயக்கங்களிலும் உண்மை எனும் மெய் இழைந்திருக்கிறது. வாழ்வது, உண்மையை அறியத்தானே தவிர வேறெதற்குமில்லை.

வாழ்வின் அத்தனை இயக்கங்களிலும் பொய்மை எனும் போலியறிவும் இழைந்திருக்கிறது. பொய்மை, கண்மூடித்தனங்களையும் பலனற்ற செயல்களையும் மனித நேய அழிவையும் வளர்க்கிறது. பொய்மையை அறிந்து அகற்ற வேண்டும். உண்மை எனும் மெய்யறிவைப் பெறும் பொழுது பொய்யறிவு தறிகெட்டு ஓடித் தங்க இடமில்லாமல் அழியும்.

ஆனால் நாம் பொய்யறிவை நம்பி உண்மைகளைப் புறக்கணிக்கிறோம். உண்மையான அன்பு, உண்மையான பாசம், உண்மையான நேயம், உண்மையான உடைமை போன்றவற்றை அறிய மறுக்கிறோம். பொய்மை ஆழமாகக் குடியிருக்கும் மனங்களில் உண்மையறிய வாய்ப்பேயில்லாது போய்விடுகிறது. மெய்யறிவுப் பாதையிலே அடியெடுத்தும் வைக்காமல் வாழ்வின் பொருளையறியாமல் வாழ நேரிடுகிறது.

பொய்மையில் உழலத் துணிவு தேவையில்லை. எந்த முயற்சியும் தேவையில்லை. ஆனால் உண்மையறியத் துணிவு வேண்டும். விடாமுயற்சி தேவை. உண்மையை அறிந்தக் கணத்தில் பொறி தட்டுகிறது. உண்மையின் ஒளி மகத்தானது. உண்மையின் பொறி தீயாகப் பரவி வாழ்வின் அத்தனைக் கேடுகளையும் தீக்குணங்களையும் போலிப் பற்றுக்களையும் பொய் நம்பிக்கைகளையும் அழிக்கத் தொடங்குகிறது. மனம் புடமிட்டப் பொன்னாகிறது. அகவொளியை அறியத் தொடங்கிய கணத்தில் புற ஒளிகளின் இருள் புரியத் தொடங்குகிறது.

வாழ்வின் இந்தத் தேவையை உணர்ந்து, மதித்து, அதைத் தேடுவோர் சிலரே. தேடுதலில் பற்று வைத்துத் தீவிரமாக முனைவோர் மிகச் சிலரே. முனைப்பைக் கைவிடாது புலனைக் கட்டித் தன்னறிவைப் பெறுவோர் இன்னும் சிலரே. தன்னறிவைப் பெற்ற நிலையில்.. அந்த அமைதியில்.. ஆன்மாவை, தன் உண்மையான சக்தியை, அறியத் தொடங்குவோர் அரிதானவர்.

இது எளிதன்று. எளிதன்று என்ற காரணத்தினால் முயற்சியைக் கைவிடுவது ஒரு சாபம் போன்றது. வருந்தத்தக்கது. வேதனைக்குரியது.

சற்று சிந்திப்போம். பிறப்பும் இறப்பும் யாதென்று அறிந்தோம். ஆன்மா கருவில் சேர்ந்தக் கணத்தில் உயிர் துடிக்கத் தொடங்குகிறது. ஆன்மா பிரியும் கணத்தில் உயிரடங்குகிறது. உயிரற்ற நிலையில் சூரிய ஒளியை அறிவோமா? சந்திர ஒளியை அறிவோமா? அப்படியெனில், உயிருடன் இருக்கையில் நாம் அறியும் ஒளிகளுக்கு ஒளியைக் கொடுத்தது ஆன்மா தானே?

ஒளிகளுக்கெல்லாம் ஒளியை வழங்கி ஒளிக்கப்பாற்பட்ட ஒளியாக விளங்கும் ஆன்மாவை அறிந்தக் கணத்தில் எந்த ஒளியுமே ஒரு பொருட்டில்லை. உயிர் பிரியும் அந்தக் கணத்தில் ஆன்மா ஒளிப்பிழம்பாக விளங்கும் வகையில் வாழ்வோம். இதுவே மெய்யறிவு. இதுவே சொர்க்கம். நாமே அந்த ஒளி. தன்னறிவே அந்த ஒளியின் சுடர். நாமே சூரியனுக்கும் சந்திரனுக்கும் ஒளியை வழங்கும் சக்தி. மனித சக்தியின் மகத்துவத்தைப் புரிந்து கொண்டு ஒளிப்பிழம்பாக வாழ்வோம். இருள் படியாமல் வாழ்வோம்" என்றான்.

அவையோர் தங்களுக்குள் பேசத்தொடங்கி அடங்கினர். நசிகேதன் சொன்ன பொருளில் ஆழங்களைத் தேடினர். முன்பு தோன்றிய கிழவி மீண்டும் கூட்டத்திலிருந்து முன்னேறி வந்தாள். நசிகேதனின் அருகே வந்து புன்னகைத்தாள். "ஐயா.. நீ பெற்ற அறிவை அனைவருடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. இன்னும் ஒரே ஒரு கேள்வி என் மனதில் தோன்றியது..." என்றாள்.

நசிகேதன் கிழவியை வணங்கினான். "சொல்லுங்கள்.. உங்கள் மனதில் தோன்றியதைக் கேளுங்கள்" என்றான்.

"ஐயா. மெய்யறிவு பற்றிச் சொன்னீர்கள். ஒளியைப் பற்றிச் சொன்னீர்கள். தன்னறிவு ஆன்மா என்றெல்லாம் சொன்னீர்கள். நானோ வயதானவள். இன்றைக்கோ நாளைக்கோ என் உயிர் பிரியும் நிலையில் இருக்கிறேன். எனக்குத் தன்னையறியவும் ஆன்மாவை அடையாளம் காணவும் ஆசை... உயிர் பிரியும் அந்தக் கணத்தைப் பற்றி ஏதாவது அறிய முடியுமா ஐயா?" என்றாள்.

நசிகேதன் சிந்தித்தான். கிழவி கேட்டக் கேள்வியின் நோக்கம் என்ன? உயிர் பிரியும் தருணத்தை அறிய முடியுமா என்று கேட்கிறாரா? உயிர்ப்பறவை எப்போது பறக்கும் என்று யாராலும் சொல்ல இயலாதே? பிறகு இந்தக் கேள்வியை என் முன் வைப்பானேன்? நசிகேதன் கிழவியை மீண்டும் வணங்கினான். "ஆன்மாவை அறியக்கூடிய அந்தக் கணத்தைப் பற்றி கேட்கிறீர்கள் என்பது புரிகிறது. மகான்கள் அனைத்தையும் அடக்கி ஆன்மாவை அறியும் சமாதி எனும் நிலையை அடைந்திருக்கிறார்கள். புலனை அடக்கி மூச்சைக் கட்டி.. எல்லாம் அடங்கிய நிலையான சமாதி எனும் நிலை பற்றிச் சொல்கிறேன்" என்றான்.

"நன்றி ஐயா" என்ற கிழவி, நசிகேதன் பார்வை தொடரும் பொழுதே கூட்டத்தில் கரைந்து மறைந்தாள்.


          கடோவின் மிகச் சிறந்த, நுண்மையான பாடல் இது. வடமொழிப் பாடலை இதுவரை நூறு முறையாவது படித்திருப்பேன் என்றால் மிகையாகாது. சூட்சுமம் புரிந்து கொண்டே இருக்கிறது :)

பாடலின் சாரம் தமிழில் சரியாக வெளிவரவில்லையெனில் அதற்கு நானே பொறுப்பு. மொழி தெரிந்தால் இன்னும் உன்னலாம் எனினும் கருத்தின் அற்புதம் மொழிக்கப்பாற்பட்டது என்பதால், வடமொழிப் பாடலின் நேர் தமிழ் வடிவத்தைத் தருகிறேன்:

அங்கே சூரியனும் பிரகாசிப்பதில்லை; சந்திரனும் தாரகைகளும் பிரகாசிப்பதில்லை; மின்னல்களும் ஏன் தீயும் பிரகாசிப்பதில்லை. அவன் பிரகாசிக்கும் பொழுது எல்லாம் பிரகாசிக்கின்றன; அவனுடைய ஒளியால் இவை எல்லாமே பிரகாசிக்கின்றன.

வடமொழிப் பாடலில் 'அவன்' என்று குறிப்பிடப்படுவது ஆன்மா. சூட்சுமக் குறிப்பு.

ஒன்றிரண்டு கருத்துக்களை மட்டும் தெரிவித்து மற்றதை உங்கள் சிந்தனைச் சுகத்துக்கே விடுகிறேன்.

கடோவுக்குப் பிறகு எழுதப்பட்டதான கீதையில் "என்னிலிருந்தே எல்லா ஒளியும் உண்டாகின்றது" என்று கண்ணன் சொல்வதாக வருகிறது. ஒளி உணரப்படுவதா, அறியப்படுவதா? ஒளி என்பது அறியப்படுவதாகும். சூரிய சந்திரனின் ஒளி இப்படிப்பட்டது என்று அறியமுடிகிறது. கண்கள் சூரியனைப் பார்த்ததும் நம் அறிவு நமக்கு அது ஒளி தருகிறது என்று அறிய வைப்பதால், சூரியன் ஒளி தருகிறது என்கிறோம். எனவே, இங்கே சூரியனின் 'ஒளி'த்தன்மைக்குக் காரணமாயிருப்பது சூரியனா, நம் அறிவா? குருடன் ஒளியை அறிவது எப்படி? ஆன்மா எனும் ஒளியை அகக் குருடர்களாகிய நம்மால் அறிய முடியுமா?

2012/03/16

ஆன்மா சேருமிடம்


86
அருவி லரியுங் கருவிற் சரியு
முருவி லிரியு மிருந்து - சுருளும்
நுருவி னொருமை புரிந்தா ரிருப்பார்
திருவிற் துரியந் தெரிந்து.

   (உடலைப் பிரிந்த ஆன்மா) அணுவாக அண்டத்தில் திரிகிறது; சில நேரம் அறுந்து இன்னொரு கருவில் விழுந்து உடலில் தங்குகிறது; தங்கினாலும் உடலிலிருந்து வெளியேறுகிறது. பூ காயாகிக் காய் கனியாகி வெடித்து விதை பரவி முளைத்து மீண்டும் பூப்பது போன்ற பிறப்பிறப்பின் சுழற்சி, உண்மையில் ஒருமையே என்று புரிந்தவர்கள் அமைதியும் தன்னறிவும் பெற்று வாழ்வார்கள்


அருவில்: அணுவில், அணுவாக
அரியும்: உலவும், பிரியும், தனிப்படும்
கருவில்: கருப்பையில்
சரியும்: விழும், தங்கும்
உருவில்: உடலில்
இருந்து: தங்கி
இரியும்: பிரியும், பறக்கும், வெளியேறும்
சுருளும்: சுற்றும், சுழலும்
நுருவின்: காய் பழுத்து வெடித்துப் பிஞ்சாவதை, பயிரறுத்துத் தளிர் தோன்றுவதை (நுரு)
ஒருமை: ஒன்றிலடங்குவது
திருவில்: அமைதி நிலையில்
துரியம்: தன்னறிவு தோன்றும் யோகநிலை, மேன்மை, கடவுள்



    சிகேதன் தொடர்ந்தான். "அன்பர்களே! 'இறந்த பின் நிகழ்வதென்ன? உயிர் எங்கே போகிறது? ஆன்மாவுக்கு என்ன ஆகிறது' என்று பல கேள்விகள் கேட்டீர்கள். என் ஆசானிடமிருந்து நான் அறிந்ததை உங்களுக்குச் சொல்கிறேன்.

இறந்தக் கணத்தில் உயிரெனும் மூச்சுக்காற்று அடங்குகிறது. ஆன்மா உடலிலிருந்துப் பிரிகிறது. உடலிலிருந்துப் பிரிந்த ஆன்மா அண்டத்தில் அணுவாகிறது. சிற்றலை பேரலை எனும் உதாரணங்களை முன்பு சொன்னேனல்லவா? வலிமையான சிற்றலை பேரலையோடு சேர்ந்து இன்னும் வலிமையானப் பேரலையாவது போல ஆன்மா பேரான்மாவின் தேடலில் ஈடுபட்டுச் சேர்கிறது. சில நேரம் பேரலை அடங்குவது போலவே, அணுவிலிருந்து பிரிந்த ஆன்மா மீண்டும் இன்னொரு கருவில் விழுகிறது. கருவில் சேர்ந்த ஆன்மா மீண்டும் பிறவியின் பாதையில் பயணம் செய்கிறது. ஆன்மா அங்கேனும் தொடர்ந்து தங்கியிருக்கிறதா என்றால் இல்லை. தங்குவதில்லை. மீண்டும் உடலிலிருந்து வெளியேறி அண்டத்தில் கலக்கிறது. இந்த சுழற்சி இயல்பானது. பிறப்பும் இறப்பும் வெவ்வேறாகத் தோன்றினாலும் ஒன்றே. எது தொடக்கம் எது முடிவு என்று அறியவியலாத சுழற்சி.

பயிரறுந்து மீண்டும் தளிராவதை நுருவென்கிறோம். பிறப்பிறப்பும் நுருவே. இந்த உண்மையை உணருவீர். முற்றிலும் உணர்ந்தால் பிறப்பு இறப்பு எனும் பேதங்களைத் துறப்போம். இறப்பினால் துக்கமுமில்லை, பிறப்பினால் மகிழ்ச்சியுமில்லை.

ஒரு மரணத்திலிருந்து இன்னொரு மரணத்திற்கானப் பயணத்தில் இளப்பாறத் தங்கும் நிழல் போன்றது பிறப்பு. ஒரு மரணத்திலிருந்து இன்னொரு மரணத்திற்கானப் பயணமெனில், எந்த மரணத்துக்காக அஞ்சுவது? அழுவது? ஆர்ப்பரிப்பது? ஒரு மரணத்திலிருந்து இன்னொரு மரணத்துக்கான பயணமெனில், எந்த மரணத்தைத் தொடர்ந்து சொர்க்கம் வரும்? நரகம் வரும்? எந்த சொர்க்கத்துக்காக வேள்விகள் செய்வது? எந்த நரகத்தைத் தவிர்க்க வேள்விகள் செய்வது?

இந்த உண்மையை ஆழ்ந்து அறிந்தோமானால் மரணத்துக்கு அஞ்ச மாட்டோம். அஞ்சிக் கண்மூட மாட்டோம். பாவ புண்ணிய சொர்க்க நரக நாடகங்களில் பங்குபெற மாட்டோம். இளைப்பாறக் கிடைத்த நிழலின் பெருமையை உணர்ந்து நடக்கப் பழகுவோம். நம்முள் புதைந்திருக்கும் மெய்யறிவானத் தன்னறிவைத் தேடத் தொடங்குவோம்.

ஒளி வீசுகிறது. வீசுகிற ஒளியில் வந்து விழுகிற பொருட்களைப் பற்றி ஒளிக்குத் தெரியாது. ஒளியில் விழும் தருணத்தில் பொருளின் தன்மை புலப்படுகிறது. அழகை மேலும் அழகாக்குகிறது. அல்லது அழுக்கை இன்னும் அழுக்காக்கிக் காட்டுகிறது. ஒளியைக் கடந்ததும் பொருள் புலப்படுவதில்லை. அழகையோ அழுக்கையோ அறிய முடிந்த அந்தக்கணத்தில் ஒளியையும் சேர்த்தே அறிந்தோம். ஆன்மா ஒளியைப் போன்றது. நம் குணங்களின் அழகையோ அழுக்கையோ அறியச் செய்கிறது. ஒளியிலிருந்து விலகுமுன் அழுக்கையகற்றுவோம்" என்றான்.

சற்று இளைப்பாறினான். பிறகு அவையோரை நோக்கி, "உங்களுக்கு அச்சம் தருவது தீயா, நீரா?" என்று கேட்டான்.

"இதில் என்ன சந்தேகம்? தீயே அச்சமூட்டுவதாகும்" என்றனர் அவையினர்.

நசிகேதன், "உண்மை. தீ அச்சமூட்டுவதாகும். அண்டத்தில் தீயின் அணுக்கள் பரவியிருக்கின்றன. அண்டத்தில் நீரின் அணுக்களும் பரவியிருக்கின்றன. தீ வெளிப்படையாக எரிந்து கொண்டேயிருப்பதில்லை. ஒரு கணத்தின் உரசலில் தீயை அறிய முடிகிறது. தீயை அறிய முடிவதால் மட்டுமே தீயின் தன்மையை உணர முடிகிறது. நீர் வெளிப்படையாகக் கண்ணுக்குத் தெரிந்தே இருப்பது. இரண்டின் தன்மைகளையும் நன்கு அறிவோம். எனினும், கண்ணுக்குத் தெரிந்த நீருக்கு நாம் அஞ்சுவதில்லை; கண்ணுக்குப் புலப்படாதத் தீயைக் கண்டு அஞ்சுகிறோம். கண்ணுக்குப் புலப்படாத தீ, கண்ணுக்குப் புலப்படும் நீரில் அடங்கி ஒடுங்கும் என்பது தெரிந்திருந்தும் நம் மனம் கண்ணுக்குப் புலப்படாததை எண்ணிச் சஞ்சலபடுகிறது. இந்த உண்மையை உணர்ந்தக் கணமே அச்சம் அழிந்துவிடும். அறிவு தெளிந்துவிடும்.

பிறப்பு இறப்பு, மகிழ்ச்சி துக்கம், செல்வம் வறுமை, ஒளி இருள், தீ நீர் என்று உலகில் எத்தனையோ வகை இருமைகளைக் காணலாம். அவை ஒருமையின் வெளிப்பாடுகளே என்று உணர்ந்தக் கணத்தில் உள்ளத்தில் பெரும் அமைதிக்கான வழி உண்டாகிறது. அந்த அமைதியைத் தொடர்ந்து வளர்த்தால் தன்னறிவு எனும் மேன்மையை அடையலாம்" என்றான்.

அவையில் அமைதி. நசிகேதனின் கருத்துக்கள் அவையோர் மனதில் பதியத் தொடங்கின.

2012/03/09

உடலெனும் மாயப் பை


85
பதினொரு பொத்த லதிசய மித்தன்
பதியறும் பத்து முதிரும் - விதியறி
மூச்சறு முன்னரே பேச்சிலும் வீச்சிலும்
ஆச்சிய மாச்சறு ஆறு.

   தினொரு துளைகளைக் கொண்ட அதிசயமாம் இவ்வுடலின் அரசனான ஆன்மா (மூச்சு நிற்கும் பொழுது) விலகும். அப்பொழுது ஐம்புலன்களும் ஐந்துணர்வுகளும் அழியும். இந்த உண்மையை அறிவீர். (அறிந்து) மூச்சு நிற்கும் முன்னரே உங்கள் சொல்லிலும் செயலிலும் கேவலத்தையும் குற்றத்தையும் அகற்றி அடங்குவீர் (என்றான் நசிகேதன்).


பதினொரு பொத்தல் அதிசயம்: உடல்1
பத்தும்: ஐந்து புலன்கள், ஐந்து உணர்வுகள்2
இத்தன்: இதன்
பதி: ஆளுனன், அரசன் (ஆன்மா, உயிர்)
அற: அற்றுப் போக, விலக, விடுபட
விதி: உண்மை
ஆச்சியம்: கேலிக்குரியது, கேவலமானது
மாச்சு: குற்றம்
ஆறு: அடங்கு
1 மனித உடலின் பதினொரு துளைகளாவன: உச்சந்தலை அல்லது கபாலம் ஒன்று, கண்கள் இரண்டு, செவிகள் இரண்டு, மூக்குத்துளை இரண்டு, வாய் ஒன்று, தொப்புள் ஒன்று, குய்யம் ஒன்று, குதம் ஒன்று (கபாலம் துளையல்ல என்பாரும் உண்டு)
2 ஐம்புலன்களாவன: மெய், வாய், கண், மூக்கு, செவி | ஐந்துணர்வுகளாவன: தொடுதல், சுவைத்தல், பார்த்தல், நுகர்தல், கேட்டல் (புலனுகர்ச்சியால் உருவாகும் ஆசை, பாசம், மகிழ்ச்சி, வருத்தம், கோபம் எனும் ஐந்து வேர் உணர்வுகளைக் குறிப்பதாகவும் கொள்ளலாம்)


    சிகேதன் தொடர்ந்தான். "அன்பர்களே! நாமே உருவாக்கி நாமே சிக்கித் தவிக்கும் கண்மூடித்தனங்கள் பற்றியும், நிலையாமை மற்றும் மனித இயல்புகள் பற்றியும், நான் கற்றதை சில கதைகள் வழியே உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். இனி நாமே குழி வெட்டி, அதில் நாமே விழுந்து, நாமே நம்மை மூடிக் கொள்வதைப் பற்றிச் சொல்ல விரும்புகிறேன்.."

"ஆகா! சொல்லுங்கள் இளவலே!"

"இந்த உடல் ஒரு பை போன்றது. ஓட்டைப் பை" என்றான்.

"நம் உடல் ஓட்டைப் பையா? என்ன சொல்கிறீர்கள்?"

"ஆம். நம் உச்சந்தலையில் ஒரு ஓட்டை. மூச்சடங்கி ஆன்மா வெளியேறும் தருணத்தில் பிளக்கும் ஓட்டை. கண்கள் இரண்டு, காதுகள் இரண்டு, நாசித்துவாரங்கள் இரண்டு, வாய் ஒன்று என முகத்திலே ஏழு ஓட்டைகள். பிறவியை அடையாளம் காட்டும் தொப்புள் ஒரு ஓட்டை. நீர்வாயில், மலவாயில் என்று இடுப்பின் கீழே இரண்டு ஓட்டைகள்".

அவையோர் சிரித்தனர். நசிகேதன் தொடர்ந்தான்.

"அன்புடையீர். பையில் ஓட்டை விழுந்தால் என்னவாகும்?"

"பையிலிருப்பது கீழே கொட்டும்"

"கொட்டாதிருந்தால்?"

"கொட்டாதிருக்க அது என்ன மாயப் பையோ?"

"ஆகா! மாயப் பை! நன்றி, அவையோர்களே! நம் உடல் ஒரு மாயப் பை போன்றது. ஓட்டைப் பையில் எதையும் கொட்டாது பிடித்து வைக்க முடியுமா? அப்படி முடிந்தால் அது அதிசயப் பை அல்லவா? நம் உடல் அத்தகைய அதிசயப் பை.

மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்புலன்களால் நாம் பெறும் உணர்வுகளைப் பற்றி முன்னர் சொன்னேன். ஐம்புலன்களால் நாம் பெறும் பற்றுகளையும் பந்தங்களைப் பற்றியும் சொன்னேன். புலனுகர்ச்சியால் விளையக்கூடிய நன்மைகளையும் தீமைகளையும் அறிந்தோம். புலனுகர்ச்சியின் போது நன்னெறிகளைப் பற்றினால் அகத்திலும் மேன்மை கூடுகிறது; நன்னென்றிகளை மறந்து தீய வழிகளில் சென்றால் ஆசை, கோபம், பொறாமை, களவு, பிணி போன்றவற்றைச் சுமக்க நேரிடுகிறது.

ஓட்டைப் பையின் குணம் என்ன? பையிலிருப்பது கீழே கொட்டும் அல்லவா? ஆனால் இந்த உடல் எனும் ஓட்டைப் பையைப் பாருங்கள். எத்தனை தீக்குணங்கள் ஏற்றித் தாங்குகிறது! எதுவும் வெளியே கொட்டுவதில்லையே? இது அதிசயப் பை அல்லவா?

அதே போல் நற்குணங்களைப் பேணினால் நிம்மதியும் நிறைவும் ஏறும். பையிலிருந்து கொட்டாது. ஆனால் நாம் இந்த மாயப்பையில் தீக்குணங்களையே திணித்துக் கொண்டிருக்கிறோம். அதை விட்டு, நன்னெறி, நிம்மதி, நிறைவினைத் திணிப்போமானால் தன்னறிவைப் பெற்று ஆன்மாவை அறிய முடியும்.

மாயப் பை என்பதை மறவாதீர்கள். ஓட்டைப் பையில்.. மாயப் பையில்.. நன்மை, தீமை இவற்றில் எதை வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் சேர்க்கலாம். எதைச் சேர்க்கப் போகிறீர்கள்?

அதிசயமான இந்தப் பொத்தல் மாயப்பை உடலை ஆளும் ஆன்மாவும், ஆன்மாவுக்கு அடங்கும் அல்லது ஆன்மாவை அடக்கும் புலன்களும் உணர்வுகளும்... எல்லாமே சற்றும் எதிர்பாராத நேரத்தில் மறைந்துவிடுவன. ஆன்மா விடுபட்டதும்.. மூச்சு நின்றதும் புலன்களும் உணர்வுகளும் காய்ந்த இலைகள் போல் உதிர்ந்து விழுகின்றன. அழிகின்றன. அந்தக் கணத்திலிருந்து நிலைத்திருப்பது மறைந்த விதமல்ல; வாழ்ந்த விதம்.

மாயப் பையின் மாயம் தொலைந்துவிடும். ஆனால் பையுள் சேர்த்தவை மறையாது. எனவே மாயப்பை நிலைக்கும் பொழுதே தீநெறிகளைக் களைவோம்.

நம் எண்ணங்களும் சொற்களும் செயல்களும் நமக்கும் நம் சந்ததிக்கும் இந்த உலகுக்கும் பெருமை சேர்க்கலாம். அல்லது சிறுமை சேர்க்கலாம். பெருமை சேர்க்கும் சொல்லையும் செயலையும் நமதாக்குவோம். புலனில் தொடங்கி மனதில் இறங்கி ஆன்மாவை அழுக்கடையச் செய்யும் மாசு படிந்த எண்ணங்களையும் செயல்களையும் தவிர்ப்போம். புலன்களை அடக்குவோம். அதனால் ஏற்படும் நிறைவில் அடங்குவோம். அமைதி பெறுவோம்" என்றான்.

2012/03/02

அங்கும் இங்கும் சொர்க்கம் உண்டு


84
ஆங்காலந் தூங்குவார் சாங்கால மேங்குவார்
தீங்கொழியா தீங்குழல்வார் காங்கியர் - ஊங்கென்ப
தீங்குள தாங்குள தாங்குள தீங்குளப்
பாங்குளந் தாங்குயர்ந் தோங்கு.

   வாழும் நாளில் பேராசையும் பிற தீங்கும் ஒழிப்பதில் முனைப்பாக இராமல் சாகும் நாளில் (சொர்க்க நரகங்களுக்கு) அஞ்சியிருப்போர் இங்கேயே உழல்வார்கள். (அவ்வாறில்லாது) அங்குள்ள மேன்மையான சொர்க்கமே இங்குமுள்ளது என்ற உண்மையை உள்ளத்தில் தக்கவைப்பீர்! (வைத்து) உயர்ந்து மேன்மையடைவீர்! (என்றான் நசிகேதன்).


ஆங்காலம்: வாழ்நாள் (ஆகும் காலம்)
சாங்காலம்: இறுதிநாள் (சாகும் காலம்)
காங்கியர்: பேராசை பிடித்தவர்கள், தீவிர புலனுகர்ச்சியாளர், சுயநலக்காரர்
ஊங்கு: பெரும் மேன்மை (சொர்க்கம்)
பாங்கு: நிலை, உண்மை, தன்மை
தாங்கு: ஏற்றுக்கொள்
ஓங்கு: உயர்வு பெறு



    சொர்க்கம் நரகம் பாவம் புண்ணியம் யாகம் யோகம் பற்றித் தான் சொன்ன கருத்துக்கள் அவையோரின் மனதிலே பதியத் தொடங்கியதை உணர்ந்த நசிகேதன், இன்னும் சொல்ல வேண்டியச் சில கருத்துக்களைச் சொல்ல இதுவே தருணமென உணர்ந்தான். கண்மூடித்தனம் பற்றிய உண்மைகளை உடைத்தெறியும் கருவிகளை அவையோருக்கு வழங்கியதைத் தொடர்ந்து, விழித்திருக்கும் அவசியத்தையும் வழிகளையும் சொல்ல முனைந்தான்.

"அன்புடையீர்.. என் உரையைத் தொடர்ந்து பொறுமையாகக் கேட்டதற்கு நன்றி" என்றான். அவையினரைப் பார்த்தான். "மாறுதலுக்காகச் சில கதைகள் சொல்ல விரும்புகிறேன். என் ஆசான் எனக்கு நிறையக் கதைகள் சொல்லியிருக்கிறார். உங்களுக்குக் கதை கேட்கப் பிடிக்குமா?" என்றான்.

அவையினர் பலமாகத் தலையசைத்து, "சொல்லுங்கள், இளவலே" என்றனர்.

"அப்படியே ஆகட்டும்" என்ற நசிகேதன், கதை சொல்லத் தொடங்கினான்.

ஒரு நாட்டில் ஒரு அரசன் இருந்தான். தலைமுறை தலைமுறையாகச் செல்வத்திலே கொழித்தது அவனுடைய அரசாங்கம். அவனது அரண்மனை அண்டை நாட்டை விடப் பெரியது. அப்படிப்பட்ட அரசன், ஒரு நாள் அவையிலே அமைச்சர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தான். இரண்டு காவலர்கள் முதியவர் போலிருந்த ஒருவரைப் பிடித்து வந்தார்கள். "மன்னா.. இவர் உங்களைக் காண வேண்டும் என்றார்" என்றனர்.

"என்ன?" என்றான் மன்னன்.

"ஐயா.. நான் வெளியூர். உலகம் சுற்றும் வாலிபன். எந்த ஊருக்குச் சென்றாலும் அங்கிருக்கும் பெரிய சத்திரத்திலே தங்குவது வழக்கம். இந்தச் சத்திரத்திலே இடம் கிடைக்குமா என்றேன். என்னைப் பிடித்து உங்கள் முன் கொண்டு வந்தார்கள். நீங்கள் தான் இந்தச் சத்திரத்தின் சொந்தக்காரரா?" என்றார் நபர்.

இதைக் கேட்ட அமைச்சர்களுக்கு பெருங்கோபம் வந்தது. "யாரடா நீ? எம் மன்னரின் இந்த அரண்மனையைச் சத்திரம் என்கிறாய்? உன்னை இப்போதே சிறையிலடைக்கிறேன்" என்றார்கள்.

நபர் விடாமல், "ஐயா.. சத்திரத்துக்குச் சொந்தக்காரரே சும்மா இருக்கிறார். நீங்கள் யார் என்னை சிறையிலடைக்க? நான் ஒரு தவறும் செய்யவில்லையே? சத்திரத்தில் இடம் கேட்டால் சிறையில் அடைப்பீர்களாமே? நல்ல கதை! இடமிருந்தால் காட்டுமய்யா.. பிடித்திருந்தால் தங்குவேன்.. சத்திர வாடகை எவ்வளவு சொல்லுமய்யா.. கேட்ட வாடகைக்கு மேல் இரண்டு பொன் தருகிறேன்" என்றார்.

இதைக் கேட்ட அமைச்சர்களுக்கு இன்னும் கோபம் வந்துவிட்டது. வாளுடன் நபர் மேல் பாய்ந்தனர். நபரை முற்றுகையிட்டு, "இவனை இங்கேயே வெட்டிக் கொல்ல அனுமதி கொடுங்கள் மன்னா!" என்றனர்.

மன்னன் நபரை வணங்கினான். நிதானமாக, "ஐயா.. சத்திரத்தில் நிறைய இடமிருக்கிறது. உங்களுக்கு இலவசம். எந்த அறை பிடித்திருக்கிறதோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்" என்றான். இளைய அமைச்சரிடம், "அமைச்சரே.. இவருக்கு இந்தச் சத்திரத்தின் அறைகளைச் சுற்றிக் காட்டுங்கள். எந்த அறை பிடித்திருக்கிறதோ அதைக் கொடுங்கள்" என்றான். இளைய அமைச்சர் புரியாமல் நபரை அரண்மனையுள் அழைத்துப் போனார்.

மூத்த அமைச்சரும் பிறரும் வாளை உறையிலிட்டு மன்னனிடம் வந்தனர். "மன்னரே! என்ன இது! அந்த வழிப்போக்கன் ஏதோ சொன்னான் என்பதற்காக நீங்களும் அதை ஏற்று நடக்கிறீர்களே..?" என்றனர்.

மன்னன் சிரித்தான். "அமைச்சரே.. இந்த அரண்மனையில் இப்போது யார் இருக்கிறார்கள்? யாருக்குச் சொந்தம்?"

"உங்களுக்கு"

"இதற்கு முன் யார் இருந்தார்கள்? யாருக்குச் சொந்தம்?"

"உங்கள் தந்தை. மறைந்த மாமன்னருக்கு"

"அவருக்கு முன்?"

"ஐயா.. உங்கள் பாட்டனார். பேரரசர் அல்லவா? அவருக்குச் சொந்தம்"

"அவருக்கு முன்?"

அமைச்சர்களுக்கு மன்னனின் கேள்வி புரிந்தது. தலைகுனிந்து மன்னரை வணங்கினர்.

மன்னன் அமைதியாக, "இது சத்திரம் என்று அவர் சொன்னதில் என்ன தவறு? நான் உயிருடன் இருக்கும் வரையில் இங்கே தங்கியிருக்க எனக்கு வாய்ப்பும் உரிமையும் கிடைத்ததே தவிர இது எனக்குச் சொந்தமல்ல" என்றான்.

"மன்னா! அறியாமல் செய்த பிழையை மன்னியுங்கள். இப்பொழுதே அந்த வழிப்போக்கரிடம் மன்னிப்புக் கேட்கிறோம்" என்றனர்.

நசிகேதன் அவையோரைப் பார்த்தான். அவையிலே அமைதி. அனைவரும் கதையின் உட்பொருளை உணர்ந்து அமைதியாக இருந்தனர்.

"கதையிலே அரசன் சொன்னது போல அவனுக்கு அந்த அரண்மனையெனும் சத்திரத்தில் வசிக்க உரிமை உண்டு. சத்திரத்தை மேம்படுத்தக் கடமை உண்டு. சொந்தம் கொண்டாட உரிமை இல்லை. அன்புடையீர்! இந்த உலகம் ஒரு சத்திரம். நாம் இங்கே வழிப்போக்கர்கள். நாமும் நமக்குப் பின் வருவோரும் மேன்மையடையும் வகையில் இந்த சத்திரத்தைப் பேண வேண்டும். நம் நெறிகள் சத்திரத்தையும் அதில் தங்க வரும் வழிப்போக்கர்களையும் மேன்மையடையச் செய்ய வேண்டும். இந்த உடல் ஒரு சத்திரம். அதில் தங்கியிருக்கும் ஆன்மா ஒரு வழிப்போக்கன். விருந்தினன். ஆன்மாவுக்குக் கேடு வராத வகையில் உடலெனும் சத்திரத்தைப் பேண வேண்டும். புலனடக்க வேண்டும். சத்திரத்தைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

என்னுடையது என்ற எண்ணம் தீங்கை விளைவிக்கும். ஏமாற்றத்தைக் கொடுக்கும். அதன் விளைவால் மேலும் தீங்கைச் சேர்க்கும். நீங்களே உழைத்துச் சேர்த்தாலும் அந்தச் சொத்தோ பொருளோ நபரோ உடைமையோ உங்களுடன் இருக்கப் போவது சில காலமே. தாயோ சேயோ பொன்னோ பொருளோ.. 'எதுவும் எனதில்லை. என் சொந்தமில்லை' என்ற அறிவே புலனடக்கப் பயிற்சியின் முதல் படி. இதை அறியாதவர்கள், எத்தனை முயன்றும் புலனுகர்ச்சியின் பிடியிலிருந்து விடுபட இயலாது. எதுவுமே நமக்குச் சொந்தமில்லை என்ற உணர்வுடன் செயல்பட்டால் புலனுகர்ச்சியின் தீவிரத்தைப் படிப்படியாகக் குறைத்து அடக்க முடியும். மேலும், கிடைத்ததை அனுபவித்து நிறைவோடு வாழவும் முடியும்" என்றான் நசிகேதன். "இன்னொரு கதை சொல்ல அனுமதியுங்கள்" என்றுத் தொடர்ந்தான்.

ஒரு ஊரின் ஒதுக்குப்புறத்தில் திடீரென்று ஒரு குடில் தோன்றியது. 'யார் கட்டியது' 'யார் வசிக்கிறார்கள்' என்று தெரியாமல் ஊர் மக்கள் குழம்பினர். மெள்ள ஊரெல்லாம் பேசத் தொடங்கினார்கள். "மாயக்குடில் ஐயா!" என்றார் ஒருவர். "என்ன நான் சொல்வது?" என்றார் அருகிலிருந்தவரிடம். "உள்ளே ஒரு மிகப்பெரிய ஞானி இருக்கிறார். அவரைச் சந்தித்தால் எல்லா வித பாவங்களும் ஒழிந்து, புண்ணியங்களை மூட்டை மூட்டையாகக் கட்டிக் கொண்டு வரலாம்" என்றார் இன்னொருவர். "யாராவது உள்ளே சென்று பார்த்தார்களா, இல்லை நீங்களாகவே ஏதாவது சொல்கிறீர்களா?" என்று கேட்டார் மற்றவர்.

இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த இரு இளைஞர்கள், "நாங்கள் இப்போதே சென்று பார்த்து வருகிறோம். விரும்பினால் உடன் வாருங்கள்" என்றனர். ஊரே அவர்களைத் தொடர்ந்து சென்றது.

குடிலுக்குள் சென்ற முதல் இளைஞர் வெகு நேரமாகியும் வரவில்லை. "பொறுங்கள். நான் உள்ளே போய் பார்க்கிறேன்" என்ற இரண்டாவது இளைஞர் சென்ற சிறிது நேரத்தில் திரும்பி வந்தார்.

"என்னய்யா? முதலில் போனவரைப் பார்த்தீரா?"

"எங்கேயும் காணோம்" என்றார் திரும்பி வந்த இளைஞர்.

"பின் வாயிற்கதவு திறந்திருந்ததா? அடைத்திருந்ததா? கவனித்தீரா?"

"பின் வாயிலில் கதவு எதுவும் இல்லை. சுவற்றிலே சிறிதாக ஒரு பிளவு. அவ்வளவுதான்"

ஊரார் வியக்கத் தொடங்கினர். "அதுவழியாக வெளியேறியிருப்பார்"

"ஒருவேளை பேய் பிசாசு அடித்திருக்குமோ?"

"மாயக்குடில் என்றேனே, கேட்டீர்களா?"

"உள்ளே ஞானி இருக்கிறார் என்றல்லவா சொன்னீர்கள்..? இப்போது ஆளை அடித்துப் போடும் மாயம் அல்லவா இருப்பதாகத் தெரிகிறது?"

இப்படி ஊரார் பலவாறு பேசத்தொடங்க, ஒருவர் இளைஞரை அணுகிக் கேட்டார். "ஐயா.. அப்படி என்ன இருந்தது உள்ளே? என்ன பார்த்தீர்? விவரமாகச் சொல்லும்"

இளைஞர் தலையைச் சொறிந்தார். "ஒன்றுமில்லை உள்ளே. சுவரெங்கும் கண்ணாடி. அவ்வளவு தான். எங்கே பார்த்தாலும் கண்ணாடி" என்றார்.

"இது என்னய்யா கதை?" என்றார் ஞானி. "இதை ஒரு பாடமாக வேறு சொல்ல வந்துவிட்டாயே?"

"இங்கே என்ன நடந்தது? குடிலில் என்ன மாயம்? ஒருவருக்கு அகக்கண் திறந்தது; மற்றவருக்குப் புறக்கண் மூடவேயில்லை. அதுவே மாயம்" என்ற நசிகேதன் தொடர்ந்தான். "தன்னை அடையாளம் காணக்கூடிய எந்த வாய்ப்பையும் அறிவுள்ள மனிதன் தவற விடுவதில்லை. தன்னை அடையாளம் காண்பது, தான் அணிந்திருக்கும் உடையிலோ, நகையிலோ, பிற சொத்துக்களினாலோ அல்ல. எப்படி வாழ்கிறோம் என்பதே தன்னை அறியும், தன்னை வெளிப்படுத்தும், அடையாளம். தன்னை அறிவிக்கும் அடையாளம். வெளித்தோற்றத்தை வைத்து நம்மைப் பிறர் அறியலாம். உள்தோற்றத்தை வைத்து நம்மை அறிய, நம்மால் மட்டுமே முடியும். நாம் நம் உள்தோற்றத்தை அறிந்து நடந்தால், பிறரும் நம் உள்தோற்றத்தைக் காண முடியும். தன்னையறிந்தவர்கள் பிறருக்கும் உய்வைக் கொடுக்கிறார்கள்" என்றான் நசிகேதன். "ஆனால், இது எளிதல்ல. தன்னையறியும் வாய்ப்பு நம் முகத்தில் இடித்தாலும் நம்மில் பலருக்கு அது புலனாகாமல் போகும். வெளிப்பார்வையை மறைக்கும் தடைகளைப் போலவே, உள்பார்வையை மறைக்கும் தடைகளும் உண்டு. தான் என்ற உணர்வு, ஆறு வகை தீக்குணங்கள், தம்மை விட உயர்ந்தவரில்லை என்ற ஆணவம், தம்மினும் மெலியாரிடம் கருணையின்மை.. இவையெல்லாமே அகப்பார்வையை மறைக்கும் தடைகள். தடைகளை உடைத்து அகப்பார்வையை வளர்க்க வேண்டும்" என்ற நசிகேதன் தொடர்ந்து, "இன்னொரு கதை சொல்லவா?" என்றான். "சொல்லுங்கள்!" என்று அவையோர் உவகையோடு வேண்டினர்.

ஏழை இளஞன் ஒருவன் ஆற்றங்கரையில் நடந்து கொண்டிருந்தான். அங்கே ஒரு முதியவர், பொன் பொருள் துணி பயிர் உணவு என்று ஒரு ஓடத்தில் ஏற்ற முடியாத அளவுக்கு ஏற்றிக் கொண்டிருந்தார். இளைஞனைப் பார்த்தவர், "மகனே!.. இங்கே வா. எனக்கு ஒரு கை தா. இந்த உடைமைகளை ஓடத்தில் ஏற்ற வேண்டும்" என்றார்.

இளைஞன் அவனருகே சென்றான். "ஐயா! இந்த உடையை நான் எடுத்துக் கொள்ளவா? குளிருக்கு அடக்கமாக இருக்கும்" என்றான்.

முதியவர் மறுத்தார். "அடடா.. அது மறுகரைக்குப் போனதும் உதவும். அதற்காகச் சேர்க்கிறேன்" என்றார்.

இளைஞன், "ஐயா! ஓடம் தாங்காத அளவுக்கு இத்தனை உணவுகளை எடுத்துப் போக வேண்டுமா?" என்றான்.

முதியவர் சிரித்தார். "மகனே.. இதை மறுகரையில்.. அதற்காகச் சேர்க்கிறேன்.. அங்கே வாழ்வதற்காக எடுத்துச் செல்கிறேன்" என்றார்.

இளைஞன், "இத்தனை பொற்காசுகள் எதற்கு? இத்தனை நகைகள் மணிகள் எதற்கு?" என்றான்.

முதியவர் முறைத்தார். "மகனே.. இவையாவும் மறுகரையில் இன்பமாக இருக்கத் தேவையானவை.. அதற்காகச் சேர்க்கிறேன் என்பது இன்னுமா உனக்குப் புரியவில்லை?" என்றார்.

இளைஞன் சிரித்தான். "ஐயா! நீர் மறுகரையில் நின்றுகொண்டிருக்கிறீர் என்பது இன்னுமா உமக்குப் புரியவில்லை?" என்றபடி அங்கிருந்து அகன்றான்.

"மூத்தவரை ஏளனம் செய்யும் இந்தக் கதையைச் சொல்லும் உனக்கு எத்தனைத் திமிர்?" என்றார் ஒரு மூத்த ஞானி.

"அறிவுக்கு வயது வேறுபாடு இல்லை. எனினும் வயது வளர வளர ஆசைகளும் காரணமற்றப் பிடிப்புகளும் அதிகமாகின்றன. அதனால் இயல்பாகப் பெறக்கூடியத் தன்னறிவு ஒடுங்கி விடுகிறது. இளையோருக்கு வாழ்க்கை நெறி அறிவுரைகள் வழங்க முன் வரும் மூத்தோர், தாம் அந்தப் பாதையில் செல்ல மறுப்பதை நம் வீட்டிலும்.. சுற்றத்திலும்.. இதோ இந்த அரசவையிலும் பார்க்கிறோம். எனவே, அன்பர்களே! வயதை வளர்ப்பதோடு நில்லாமல் அறிவையும் வளர்ப்போம். அறிவு வளர்ந்தால் மட்டுமே வயதுக்கும் மதிப்பு என்பதை நினைவில் வைப்போம்.

அறியாத இடத்தைச் சொர்க்கம் என்று போற்றி, அறிந்த இடத்தை நரகமாக்குவது அறிவற்றவர் இயல்பு. நமக்குக் கிடைத்திருக்கும் ஒரு வாய்ப்பைச் செவ்வனே பயன்படுத்தி, நம் வாழ்க்கை நெறிகளில் தீமைகளைக் களைந்து நன்னெறிகளை வளர்த்தால், நமக்கும் நம்மைச் சார்ந்தோருக்கும் பிறருக்கும் இந்த வாழ்வை.. இந்த உலகை.. சொர்க்கமாக்கலாம். இதை அறியாதவர்கள் வாழும் நாளிலே தீக்குணங்களை அறுக்க மறக்கிறார்கள். இந்த உலகை.. வாழ்வை.. தமக்கும் பிறருக்கும் பெரும் நரகமாக்குகிறார்கள். சாகும் நாளுக்கானச் சுமையைச் சேர்க்கிறார்கள். அல்லது சாகும் நாளிலே தீக்குணங்களின் விளைவுகளைப் போக்க, போலிச் சடங்குகளிலே இறங்குகிறார்கள். இவர்கள் அறிவற்றவர்கள்.

தீக்குணங்களே இல்லாதவரும் பல நேரம் அறிவற்றவராவர். எப்படி? நற்குணங்களை தாமும் பிறரும் உய்யும் வகையில் பயன்படுத்தாமல், சாகும் காலத்தில் பயன்படும் என்றப் பொய்யான நம்பிக்கையில் மூழ்கி, வளர்த்த நற்குணங்களின் விளைவுகளை இழக்கிறார்கள்..."

"அதிருக்கட்டும் மகனே!" என்று குறுக்கிட்டார் ஒரு பாமரக் கிழவி.

நசிகேதனின் அருகே வந்தார். நசிகேதனின் முகத்தைக் கைகளால் தொட்டுச் சுற்றிக் காற்றிலே முறித்தார். "கண்ணேறு!" என்றார். நசிகேதன் சிரித்து, "உங்கள் அன்புக்கு நன்றியம்மா!" என்றான். கிழவி தொடர்ந்தார். "ஐயா.. சொர்க்கம் அங்கே இல்லை என்று சொல்கிறாய். நம் முன்னோர்கள் என்ன முட்டாள்களா? இன்ன நேரத்தில் இன்ன சொல்லி இன்ன செய்தால் பாவங்கள் விலகும், புண்ணியங்கள் சேரும் என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறார்களே? தீ வளர்த்து மந்திரங்கள் சொல்லி உடல் வருத்தித் தரையில் புரண்டால் சொர்க்கம் கிடைக்கும் என்றார்களே? நேற்றுப் பிறந்த நீ.. இப்படி முரணாகப் பேசலாமா ஐயா? தவறில்லையா? எல்லாம் காரணத்தோடு தானே பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்?"

அவையிலிருந்த காவிகளும் தாடிகளும் சிரித்தார்கள். "சரியாகச் சொன்னாய் கிழவி! இதற்கென்ன சொல்கிறாய் நசிகேதா? நம் முன்னோர்கள் என்ன முட்டாள்களா?"

கிழவியும் கண்கள் மின்னப் புன்னகைத்தார். அவையில் கலந்தார். கிழவியை இதற்கு முன் எங்கோ கண்டதாகத் தோன்றியது நசிகேதனுக்கு. "எனக்குத் தெரியாது" என்றான் நசிகேதன். "எனக்குத் தெரிந்ததெல்லாம் இன்னொரு கதை. விரும்பினால் சொல்கிறேன்"

"சொல்லுங்கள்!" என்றது அவையின் ஒரு கூட்டம். நசிகேதன் தொடர்ந்தான்.

"ஒரு ஊரில் ஒரு மடம் இருந்தது. மடத்திலே ஒரு துறவி இருந்தார். மிகப் பெரும் ஞானி என்று புகழ்பெற்றவர். தினம் தவத்திலும் யோகத்திலும் திளைத்துப் புலன்களைக் கட்டியவர் என்று பெயரெடுத்ததால் அவரைக் காண அரசரும் மக்களும் படித்தவரும் பாமரரும் வந்த வண்ணம் இருந்தனர். அவரிடம் சீடராகச் சேர்ந்து மேன்மையடைய எண்ணி வந்தவர் ஏராளம். எண்ணற்றோர் சீடராக விரும்பியதால், ஞானி பத்து சீடர்களை ஒரு மாத காலமே ஏற்பார். அடுத்த மாதம் புதிதாகப் பத்து சீடர்கள்.

தினமும் காலையில் துறவி யோகத்தில் ஆழ்வது வழக்கம். அவர் என்ன செய்தாரோ அதையே சீடர்களும் பின்பற்றி யோகப் பயிற்சி செய்தார்கள். பகல் வரை இந்த யோகம். அதற்குப் பிறகு தன்னைக் காண வந்தவருடன் உரையாடுவார். சீடர்கள் சமைத்து வைத்த உணவை அருந்துவார். சிறிது உறங்குவார். மீண்டும் மாலையில் யோகம், தவம். இப்படிக் கழிந்து வந்தது அவருடைய வாழ்க்கை. சீடர்களுக்கு எந்தவித ஞானமும் வழங்கவில்லை. எனினும், என்றைக்காவது அவருடைய ஞான ஒளி தங்கள் மேல் பட்டு வீசும் என்ற நம்பிக்கையில் அவருக்குப் பணிவிடை செய்து வந்தனர் சீடர்கள்.

இப்படி இருக்கையில் ஒரு நாள் அவரைக் காண வந்தப் பாமரர்களில் ஒருவர் துறவிக்கு ஒரு கோழியை வழங்கி, "ஐயா, பரம ஞானி! உங்கள் அருளால் என்னுடைய வியாபாரம் செழிக்கிறது. இந்தக் கோழியை நீங்கள் இந்தப் பாமரனின் நன்றியாக ஏற்கவேண்டும்" என்று சொல்லி கோழியை அங்கேயே விட்டுப் போனார். ஞானியும் சீடர்களும் கோழியை மறந்தார்கள்.

காலையில் பூஜை வகைகளை முடித்த ஞானி, யோகத்தில் மூழ்கினார். சீடர்களும் சற்று ஒதுங்கி நின்று குருவைப் பின்பற்றி யோகத்தில் மூழ்கினர். கோழிக்குப் பசி. பசிக்கு ஏதாவது கிடைக்குமா என்று தேடியது. ஒரு புழுவும் கண்ணில் படவில்லை. அங்குமிங்கும் சுற்றிய கோழி, ஞானி தவமிருக்கும் இடத்திற்கு வந்தது. அங்கே ஞானியெதிரே தரையில் அரிசியும் நெல்லும் சோறும் கிடந்ததைப் பார்த்தது. "ஆகா! பசி தீர்ந்தது" என்று எண்ணிய கோழி, வேகமாகக் கத்தியபடி உள்ளே வந்து தானியங்களைக் கொத்தித் தின்னத் தொடங்கியது. அதற்கு ஒரே மகிழ்ச்சி. பக் பக் பக் என்று ஓசை எழுப்பி, ஒரு தானியம் விடாமல் கொத்தத் தொடங்கியது. கோழியின் ஓசைகளால் யோகம் தடைபட, ஞானி கண் விழித்தார். சீடர்களிடம் கோழியை விரட்டியடிக்கச் சொன்னார். சீடர்களும் அவ்வாறே செய்தனர்.

சில கணங்களில் கோழி திரும்பியது. பக் பக் பக் என்றது. ஞானிக்குப் பொறுக்கவில்லை. ஏசினார். "இந்தச் சனியனை ஓரமாகக் கட்டிப் போடுங்கள்" என்றார். சீடர்களும் அவ்வாறே செய்தனர். அதற்குப் பிறகு, தினமும் ஞானி தவம் தொடங்குமுன் சீடர்கள் கோழியைப் பிடித்துக் கட்டிப் போட்டனர். வெளியிலிருந்து சில நேரம் ஞானியைக் காணவந்தோரும் இதைக் கவனித்தனர். பழைய சீடர்கள், புதிதாகச் சேர்ந்த சீடர்களுக்கு கோழியைப் பிடித்துக் கட்டும் ஒழுங்கினை மறவாமல் போதித்தனர்.

சில மாதங்களில் துறவி நோய்வாய்ப் பட்டார். இருந்த சீடர்களிலே மூத்தவர் ஒருவரைத் தன் மடத்துக்கு வாரிசாக நியமித்துவிட்டு இறந்து போனார். புதிய ஞானியும் பூஜைகளையும் தவங்களையும் செய்து வந்தார். கோழியை மறக்காமல் கட்டி வந்த சீடர்கள், ஒரு நாள் கோழியைத் தேடிக் கொண்டு போனார்கள். பார்த்தால்.. கோழி இறந்து கிடந்தது. குரு பூஜையைத் தொடங்குமுன் கோழியைக் கட்ட வேண்டுமே? என்ன செய்வது? ஊரிலிருந்து இன்னொரு கோழியைப் பிடித்து வந்த சீடன், "இதைக் கட்டுவோம்" என்றான்.

"எங்கே பிடித்தாய் புதுக் கோழியை?" என்றார் ஞானி.

"மகாப்பிரபு! ஞானமூர்த்தி!! எல்லாம் உங்கள் அருள்! ஊரிலே பிடித்தேன் ஐயா! கோழி இறந்துவிட்டதைச் சொல்லி தவம் செய்யக் கோழி வேண்டும் என்றேன். நீங்கள் தவம் செய்யும் பொழுது கோழி கட்டுவதை ஏற்கனவே பார்த்திருக்கும் ஊர் மக்கள், தாங்களாகவே ஆளுக்கு ஒரு கோழி கொடுக்க முன் வந்தார்கள். நான் அவசரமாக முதலில் கிடைத்தக் கோழியைப் பிடித்து வந்தேன்" என்றான்.

"எல்லாம் என் குருவின் மகிமை!" என்ற ஞானி, பழைய குருவை மனதில் எண்ணி, அமைதியானப் புன்னகையுடன் கோழியைக் கட்டுமாறு பணித்தார். குருவின் கருணையே வடிவானப் புன்னகையில் மெய் சிலிர்த்தச் சீடர்கள், கோழியைக் கட்டினார்கள். தவம் தொடர்ந்தது.

கோழியைக் கட்டித் தியானம் செய்யும் வழக்கம் அந்த ஊரிலும் மெள்ளப் பரவியது.

கதை சொல்லி முடித்த நசிகேதன் அவையோரைப் புன்னகையுடன் பார்த்தான்.

"இது கதையா புதிரா?" என்றார் ஒருவர்.

"எதையோ கேட்டால் கதை சொல்கிறது பிள்ளை. இதையும் கேட்க வந்தோம் பார்!" என்றார் அரசவை ஞானி.

"ஐயா.. நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரிகிறது" என்றான் ஒரு இளைஞன்.

"ஒரு கோழியின் தொந்தரவைப் பொறுக்க முடியாதவர் துறவியே அல்ல. அவர் புலனடக்கவில்லை" என்றார் அவையில் ஒரு பெண்மணி.

"சீடர்களுக்கும் அறிவில்லை, குருவுக்கும் அறிவில்லை. கோழியை ஏன் கட்ட வேண்டும் என்று ஒருவர் கூட சிந்திக்கவில்லை. கண்மூடிகள்!" என்றான் இளைஞன்.

"கண்மூடித்தனம் தொடர்வதால், அதற்கு இல்லாத காரணம் ஒன்றும் உண்டாகி விடுகிறது. இல்லாத காரணத்தை ஏற்றுக் கண்மூடித்தனமும் தொடர்கிறது. மிகக் கொடிய சுழற்சி!" என்றார் பெண்மணி.

நசிகேதன் சிரித்து, "நீங்கள் சொல்வது அனைத்தும் சரியே. புலனடக்கம் என்பது அகப்பார்வையில் வருவது. இவர்கள் புறப்பார்வையிலேயே உழன்றதால் இவர்களால் புலனடக்க முடியவில்லை. முடியாது. மாறாக, கோழிகட்டுதல் போன்ற ஒரு அடையாளம் தேடிக் கண்மூடித்தனமாக நடந்தார்கள். பிறருக்கு வழிகாட்ட வேண்டியவரான ஞானியே கண்மூடியாக இருந்ததால், அவரைக் குருவாக ஏற்ற சீடர்களும் ஊர் மக்களும் கோழிகட்டிக் கண்மூடினார்கள்" என்றான்.

அவையோர் ஆமோதித்தனர்.

"நம் முன்னோர்கள் முட்டாள்களா இல்லையா என்பதைத் தீர்மானிக்க எனக்குத் தகுதியோ வயதோ இல்லை. நம் முன்னோர்கள் முட்டாள்களா இல்லையா என்பதைத் தீர்மானிக்க வேண்டிய அவசியம் இல்லை. தீர்மானித்துப் பயனும் இல்லை. நாம் முட்டாள்களா இல்லையா என்று தீர்மானிப்போம். நம் சந்ததி நம்மை முட்டாள்கள் என்று தீர்மானிக்கும் விதத்தில் நம் சொல்லும் செயலும் அமையுமா என்பதே கேள்வி.

சடங்குகளின் வேர்களை ஆராய வேண்டியதில்லை. சடங்குகளால் மேன்மை வருவதில்லை என்பதைப் புரிந்து கொண்டாலே நாம் மேன்மைப் பாதையிலே அடியெடுத்து வைத்தவர்களாகிறோம். அறிவாலும் நெறியாலும் கிடைக்காத மேன்மை சடங்கினாலே கிடைக்காது.

அங்குள்ளதாக நீங்கள் எண்ணும் சொர்க்கம், இங்கு உள்ளது. இங்குள்ளதே அங்கும் உள்ளது. இதை உணர்வீர். வேறு சொர்க்கம் நரகம் இல்லை. சொர்க்கத்தையும் நரகத்தையும் நாமே உருவாக்குகிறோம். இங்கே உருவாக்குகிறோம். அல்லது அங்கே உருவாக்குகிறோம். இதை அறிந்து நடப்பவர்களுக்கு சொர்க்கம் நரகம் பற்றிய அச்சமே வருவதில்லை. வாழும் நாளிலே மேன்மையைப் பற்றிய இவர்கள், சாகும் நாளில் அஞ்சுவதில்லை, ஏங்குவதில்லை. இதை அறியாது நடப்பவர்கள் சாவைக் கண்டு அஞ்சி ஒடுங்குகிறார்கள். ஒரு மரணத்திலிருந்து இன்னொரு மரணத்துக்குப் பயணம் செய்கிறார்கள்.

ஆதலின் அன்புடையீர்! சொர்க்க நரகங்கள் பற்றிய இந்த உண்மையை உளத்தில் ஏற்றித் தக்க வைப்போம்! உண்மையறிவைப் பெற முயல்வோம்! உண்மையறிவைப் பெற்று மேன்மையடைவோம்!" என்றான் நசிகேதன்.

அவையினர் நசிகேதனை வாழ்த்தினர். நசிகேதனின் பார்வை கிழவியைத் தேடியது.

நசிகேதன் சொன்னக் கதைகளையும் பாடங்களையும் கேட்டு அவையோர் மகிழ்ந்ததைக் கண்ட மன்னன் வாசன் மனதிலும் ஒரு எண்ணம் வேர்விட்டது. தனக்கும் தன் நாட்டு மக்களுக்கும் நசிகேதனை விடச் சிறந்த ஆசான், குரு, தலைவன் வேறு எவரும் இல்லை என்ற எண்ணம்.