வருகைக்கு நன்றி.

நசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது.                  உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்?)                        வருகைக்கு நன்றி

2012/01/20

அவையில் ஆயிரம் கேள்விகள்


79
பிறப்பிறப்பு பேரின்பம் பாழ்நரகம் பற்றித்
திறந்திட்டக் கேள்விமடை கண்டான் - விறவாது
வெள்ளம் வடியும் நிலமாய் நசிகேதன்
மெள்ள மொழிந்தான் எழுந்து.

   பிறப்பு, இறப்பு, சொர்க்கம், நரகம், மோட்சம் பற்றிப் பலவித கேள்விகள் மடை திறந்த வெள்ளம் போல் அவையோரிடமிருந்து வந்தன. அஞ்சாமல் விலகாமல் கேள்விகளை ஏற்ற நசிகேதன், வெள்ளத்தை வடித்து எழும் நிலம் போல மெள்ளத் தன் கருத்துக்களைச் சொல்ல எழுந்தான்.


விறவாது: அஞ்சாது, தயங்காது

    மனுலகம் சென்று வந்த நசிகேதனைக் கண்ட அவையோரின் பிரமிப்பு அடங்கத் தொடங்கியது.

அவையோரின் மனதில் ஆயிரம் கேள்விகள். 'எமன் எப்படியிருப்பான்? சொர்க்கம் எப்படியிருக்கும்? நரகம் எப்படியிருக்கும்? எமனுலகில் என்ன கண்டான்? மரண ரகசியம் என்பது என்ன? மோட்சம் என்பது உண்மையா பொய்யா? எமனிடமிருந்து நசிகேதன் என்ன கற்று வந்தான்? என்ன பரிசுகள் பெற்று வந்தான்? பிறவாமை என்பது சாத்தியமா? உண்மையிலேயே எமனைச் சந்தித்துத் திரும்பினானா? அங்கே கொடுமைகள் உண்டா? தேவர்கள் உண்டா? கடவுளைக் கண்டானா? யாரைச் சந்தித்தான்? யாருடன் பேசினான்? பாவத்திற்கு தண்டனை கொடுத்தார்களா? புண்ணியங்களுக்கு பரிசு கொடுத்தார்களா? தானம் தவம் செய்வதால் சொர்க்கம் கிடைக்குமா? பாவங்களை போக்கடிக்கும் மருந்து உண்டா? சடங்குகளில் சிறந்தது எது? பிறவாமைக்கு உத்தரவாதம் தரும் ரகசியத்தை எமன் சொன்னானா? எமனைக் கண்டு அஞ்சுவதில் பொருளுண்டா? சொர்க்கப் பதவி கிடைக்க என்ன செய்ய வேண்டும்? எத்தகைய தானம் சிறந்தது? எந்த விரதங்களைக் கடைபிடிக்க வேண்டும்? எந்தக் காவிகளின் பின் செல்ல வேண்டும்? யாரை வணங்க வேண்டும்? எத்தகைய யாகங்கள் செய்ய வேண்டும்? அடுத்த பிறவியில் அரசனாகப் பிறக்க வழி உண்டா? வேதங்கள் ஓதியும் யாகங்கள் புரிந்தும் மோட்சம் பெற முடியுமா? எமன் அன்பாகப் பழகுவானா? நசிகேதனைத் துன்புறுத்தினானா? இனி நசிகேதனுக்கு மரணமுண்டா? பிறவியுண்டா? நசிகேதன் எமனுடன் என்ன பேசினான்? நசிகேதன் எமனை ஏமாற்றியது எப்படி? அல்லது எமன் மனமிறங்கி நசிகேதனை அனுப்பி வைத்தானா? மகனையே எமனுக்குத் தானம் கொடுத்த தந்தையை நசிகேதன் மன்னித்தானா? தந்தை செய்த தவறுக்கு தண்டனை கிடைக்குமா? எமன் வருவதை அறிவது எப்படி? நசிகேதன் இறந்தவர்களை எமனுலகில் சந்தித்தானா? இறந்த மனிதர்கள் எப்படி இருந்தார்கள்? ஓலமிட்டார்களா? துடித்தார்களா? மகிழ்ச்சியோடு இருந்தார்களா? செய்த பாவங்களை எண்ணிப் புலம்பினார்களா? புண்ணியங்களுக்குப் பொருத்தமான பலன் அவர்களுக்குக் கிடைத்ததா? சொர்க்கம் கிடைக்க ஏதாவது மந்திரம் ஜெபிக்க முடியுமா? நசிகேதன் பொலிவுடன் இருப்பதன் ரகசியம் என்ன? ஏதோ ஒளி வீசுவது போல் தோன்றும் காரணம் என்ன? தங்கள் நலத்துக்காக எமனிடம் வேண்டினானா? நசிகேதனின் கால்களைத் தொட்டால் மோட்சம் கிடைக்கும் என்று தோன்றுகிறதே? சொர்க்க நரகம் பற்றிக் காவிகளும் தாடிகளும் சொன்னதெல்லாம் பொருந்தியதா? எவ்வளவு பொன்னும் பசுவும் தானம் தர வேண்டும்? ... ' என்று அடாத கேள்வி மழை.

மடை திறந்த வெள்ளம் போல் வரிசையாகவும் வேகமாகவும் அவையிலிருந்து கேள்விகள் வந்தவண்ணம் இருந்தன. வெள்ளம் பரவி நிலத்தை மூடுவது போல் நசிகேதனைக் கேள்விகள் மூழ்கடித்தன.

எத்தகைய வெள்ளத்தையும் கிரகித்து வடித்து வெளிவரும் நிலத்தைப் போல நசிகேதனும் கேள்விகளை ஏற்று பதில் சொல்ல மெள்ள எழுந்தான். அவையோரை வணங்கித் தன் உரையைத் தொடங்கினான்.

2012/01/13

அறிஞர்கள் அறிய வேண்டினான் அரசன்


78
மாரனிடம் மீட்டுவந்த வீரமகன் வாலறிவை
ஊரறிய வேண்டினான் வாசரசன் - பேரவையில்
ஆரறிந்தோர் அண்மையிலே கேட்டான் கந்தமகன்
சீரறிவின் சாரத்தை வேண்டி.

   மனை வென்றுத் தன் வீரமகன் பெற்று வந்த மெய்யறிவை, நாட்டு மக்கள் அறிய விரும்பினான் மன்னன் வாசன். தன்னுடைய அரசவையில், கற்றுத் தெளிந்த சான்றோர்கள் முன்னிலையில், அழியாத்தன்மை பெற்ற மகனிடம் அவன் பெற்ற சிறப்பான மெய்யறிவின் சாரத்தை வழங்குமாறு வேண்டினான்.


மாரனிடம்: மரணத்துக்குக் காரணமானவனிடம், எமனிடம்
வாலறிவு: பேரறிவு, மெய்யறிவு
ஊரறிய: நாடறிய, நிலமறிய
ஆரறிந்தோர்: நிறைந்த அறிவைப் பெற்றோர், சான்றோர்
கந்தமகன்: அழிவில்லாத மகன் (கந்தம்: அருகம், அழியாமை)
சீரறிவு: சிறப்பு மிக்க அறிவு, மெய்யறிவு



    மனுலம் சென்று வந்த நசிகேதனை வரவேற்று, பெற்றோரும் உற்றோரும் அவனைத் தழுவியும் வணங்கியும் மகிழ்ந்தனர்.

எமனுலகம் சென்று மீண்ட மகனின் வளர்ச்சியில் வியந்து உவகையில் பூரித்தான் வாசன். நசிகேதனின் உடல் மன வளர்ச்சியைக் காட்டிலும், அறிவு பலமடங்கு வளர்ந்திருப்பதை நாளடைவில் புரிந்து கொண்டான் தந்தை. தன் அரசவை அறிஞர்களின் மொத்த அறிவும், மகனறிவின் ஒரு சிறு பகுதியை விடக் குறைவு என்று புரிந்து கொண்டான். 'தோளுக்கு மிஞ்சியவன் தோழன் என்று இவனை நடத்துவது போலே, அறிவில் மிஞ்சியவன் ஆசான் என்ற வகையிலும் இவனை மதிக்க வேண்டுமோ?' என்று நினைத்தான். 'ஆகா! இவனுடைய அறிவு எனக்குச் சொந்தமல்ல. என் அரசவைக்கு சொந்தமல்ல. என் மக்களுக்குச் சொந்தமல்ல. இந்த ஊருக்கு, நாட்டுக்கு, ஏன் இந்த உலகத்துக்கே சொந்தமானதல்லவா?!' என்று எண்ணி, தன் கடமையை உணர்ந்தான்.

நசிகேதனின் நல்லறிவை நாடறியும் வழியைச் சிந்தித்தான் வாசன். அறிவு விழா நடத்த எண்ணினான்.

கற்றுத் தெளிந்த அறிஞர்கள் அனைவரையும் தன் அரசவைக்கு வரவழைத்தான். ஊர் மக்களையும் நாட்டு மக்களையும் வரவழைத்தான். சிற்றரசர்களையும் பேரரசர்களையும் வரவழைத்தான். சொர்க்க நரகம் அறிந்தவர் போல் பாவ புண்ணிய சாத்திரங்களும் விதிகளும் சம்பிரதாயங்களும் சொல்லிக்கொண்டிருந்த தாடிகளையும் காவிகளையும் வரவழைத்தான். பாமரர்களை வரவழைத்தான். அத்தனை ஆன்றோர்களும் சான்றோர்களும் சாதாரணர்களும் கூடியிருக்க, மகன் நசிகேதனை அவர்கள் முன் நிறுத்தினான்.

நசிகேதனின் அறிவொளியில் மன்னனின் பேரவை மின்னியது. விளக்கேந்துவோர் விளக்குகளை ஒதுக்கி, வாசன் மகனைக் கவனித்தனர். நசிகேதன் முகத்தின் குளிர்ச்சி அரசவை எங்கும் பரவியது. சாமரம் மறந்தனர் சாமரக்காரர். நசிகேதன் நின்ற விதத்திலே அவனுடைய வீரமும் விவேகமும் தெரிந்தது. பகை மறந்து அரசர்களும் அடங்கினர். நசிகேதன் பார்வையில் அறிவுப்பொறி பறந்தது. அது கண்ட அறிஞர்கள் அகந்தை அழிந்தனர், சாத்திரக் காவிகளோ ஆத்திரம் தொலைத்தனர்.

'இவன் வாய் திறந்தால் இன்னும் என்னென்ன அற்புதங்கள் நேருமோ?' என்று பாமரர்கள் வியந்தனர். 'இவனை அரசனாக்காமல் இன்னும் அரசபதவியைப் பிடித்துக் கொண்டிருக்கும் மூத்தவருக்கு அறிவேயில்லையோ?' என்றும் சிலர் எண்ணினர்.

அரசவையின் கோலத்தைக் கண்ட அரசன் வாசனின் மனதிலும் இத்தகைய எண்ணங்கள் மோதின. அகந்தை அழிந்த, ஆத்திரம் அழிந்த, கண்மூடித்தனம் மறந்த, கோபம் துறந்த ஒரு தெளிந்த மனதோடு தன் மகனை அணுகினான். காலனை வென்று வந்த கந்தமகனை, அழியாத்தன்மை பெற்று விட்ட அழகு மகனை, அனைவர் முன்னிலையில் மீண்டும் அடி பணிந்து வணங்கினான்.

"ஐயா!" என்றான். அவையிலே அமைதி.

தொடர்ந்து, "காவிகள் பின் சென்று, சாத்திரங்கள் கேட்டு, பேராசையில் கண்மூடி, அறிவை இழந்தப் பெருங்குருடனான என்னை மன்னித்து விடுங்கள். என் தவறை மன்னித்து, என்னுடைய அரசவைக்கு வருகை தந்ததில் பெரும் மகிழ்ச்சி..

..இங்கே அறிஞர்கள் பலர் கூடியிருக்கிறார்கள். ஆனால் உங்களைக் கண்டதுமே நாங்கள் அறிந்ததெல்லாம் மறைந்தது போல் தோன்றுகிறது. அறிஞர்களான இவர்களும், அறியாதவர்களான என் போன்றோரும், அறியவேண்டிய மெய்யறிவை எடுத்துச் சொல்லுங்கள்" என்றான் வாசன்.

2012/01/06

மண்வந்தான் மைந்தன்

77
விழியிழந்துப் பின்விழி பெற்றாலும் வாசன்
மொழியிழந்தான் மைந்தனைக் கண்டு - எழில்கூடி
மண்வந்த மைந்தன் கடலானான் தந்தையின்
கண்களில் காவிரி கண்டு.

   ன் மைந்தனைக் கண்ட வாசன் கண்ணிழந்த குருடர் கண் பெற்றது போல் மகிழ்ந்தாலும், அதை வெளிப்படுத்தும் மொழியிழந்து நின்றான். பேச்சிழந்தத் தன் தந்தையின் கண்களில் நதியெனப் பெருகியக் கண்ணீரைக் கண்டதும், அழகும் உயர்வும் பெருகி மண்ணுலகம் மீண்ட மகன் நசிகேதனின் கண்கள் கடலானது.





    மனின் ஆட்கள் நசிகேதனை வாசனின் அரண்மனையில் விட்டுப் போனார்கள்.

நசிகேதனைக் கண்டக் காவலர்கள் அவன் காலில் விழுந்து வணங்கினார்கள். உள்ளே அடியெடுத்து வைத்தான் நசிகேதன். அவனைக் கண்டவரெல்லாம் கும்பிட்டனர். காலில் விழுந்தனர். 'யார் இந்த இளைய மகான்? எம் இளவரசர் போலவே இருக்கிறாரே?' என்று அச்சத்திலும் அதிசயத்திலும் வணங்கினார்கள். சலசலப்பு அரண்மனைக்குள்ளும் எட்டியது. சிலர் ஓடிச்சென்று மன்னன் வாசனிடம் செய்தி சொன்னார்கள்.

'இதென்ன எமதூதர்களின் வருகை!' என வெருண்டு வெளியில் வந்த வாசன், அறை வாயிலில் நின்றவனைக் கண்டு வாயடைத்துப் போனான். 'என் மகன் போலவே இருக்கும் இவன் யாராக இருக்கும்?. என் மகனை இழந்த சோகத்தில் யாரைப் பார்த்தாலும் நசிகேதன் போலவே இருக்கிறதே? இவன் நசிகேதனை விட அழகாகவும் பொலிவுடனும் இருக்கிறானே! இவன் முகத்தில் வீசும் அமைதியின் ஒளி ஆயிரம் தீப்பந்தங்களைத் தோற்கடிக்கிறதே! யார் இவன்?' என்று பலவாறு எண்ணியபடி வாயிலை நோக்கி நடந்தான்.

"அப்பா!" என்றான் பிள்ளை. ஆயிரம் தீப்பந்தங்கள் சுட்டாற் போல் இருந்தது வாசனுக்கு. இருந்தும் தேன் குடங்கள் சரிந்தாற் போல இனித்தது.

"நசிகேதா! என் மகனே!" என்று உரக்கச் சொல்லி உவகை பெற நினைத்தவன், திடுக்கிட்டான். பேச முடியவில்லை. நா எழவில்லை. 'இதென்ன கொடுமை! இத்தனை நாள் குருடனாக இருந்தேன். கண் திறந்தக் கணத்தில் வாய் மூடியதே?' என்றுக் கலங்கினான். 'இதுவும் நன்மைக்கே. வாய் தவறியதால் வந்த வினையில் தானே இவனை இழந்தேன்? வாய்ச் சொல்லில் என்ன பயன்?' என்று அடங்கினான்.

'மகனே!' என்று மனதால் அழைத்தான் வாசன். கண்களில் திரண்டக் கண்ணீர் நதியாக ஓடியது.

தந்தையின் நிலையைக் கண்ட மகன் நசிகேதனின் மனமும் கரைந்துருகியது. நதியைத் தேடிவந்த கடல் போல் அவன் தந்தையிடம் ஓடினான். அவன் கண்களிலும் கடலெனக் கண்ணீர்.

காலில் விழப்போன மகனைத் தடுத்து நிறுத்தினான் வாசன். அனைவரும் பார்த்து நிற்க, மகனின் கால்களில் விழுந்து வணங்கினான் தந்தை.